வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல்; கலசத்தில் காசுகள்… செல்வ கடாக்ஷம் பெருகும்

வரலக்ஷ்மி பூஜையில், கலசத்துக்குள் வைக்கப்படும் நாணயங்களும் அதைக் கொண்டு செய்யப்படும் பூஜைகளும் சக்தி வாய்ந்தவை. கடனில் மூழ்கி தத்தளிக்கும் குடும்பங்களைக் கரை சேர்த்து அருளுவாள் மகாலக்ஷ்மி.
உலகம் முழுதுமாக சக்தி வியாபித்திருக்கும் மாதம் ஆடி மாதம். சக்தி என்று போற்றப்படுகிற பராசக்தி உள்ளிட்ட பெண் தெய்வங்களைக் கொண்டாடுவதற்கான, வணங்குவதற்கான, அற்புதமான மாதம்.
ஆடிப்பூரம், ஆடித் தபசு முதலான விழாக்களும் ஆடி மாதத்தின் முக்கிய பண்டிகைகள். ஆடிப்பெருக்கு எனும் வைபவமும் நீர் நிலை வழிபாடும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதேபோல், உலகமெங்கும் வியாபித்துப் பரவியிருக்கும் மகாசக்தியின் சக்தியை, அம்பிகையின் சக்தியை, மகாலக்ஷ்மியின் சக்தியை, நம் வீட்டுக்கே வரவழைக்கும் மிக எளிமையான வழிபாடுதான் வரலட்சுமி பூஜை.
வருகிற 31.7.2020 வரலட்சுமி பூஜை. வெள்ளிக்கிழமை நாளில், வரலக்ஷ்மி பூஜையை மிக ஆத்மார்த்தமாகச் செய்யவேண்டும். எளிமையாகச் செய்யக் கூடிய பூஜைதான் இது.
பூஜையில், கலசம் வைக்கவேண்டும். கலசத்தில், மங்கலப் பொருட்களை வைப்பார்கள். முக்கியமாக, நாணயங்களை வைப்பார்கள். மகாலக்ஷ்மி எலுமிச்சையில் வாசம் செய்கிறாள் என்று ஐதீகம். எனவே, ஒரு எலுமிச்சையை கலசத்துக்குள் இடலாம். வீட்டில் தங்கக்காசு இருந்தால் போடலாம். ‘அதுக்கெல்லாம் எங்கே வசதி இருக்கு’ என்று கலங்குபவர்கள், சாதாரணக் காசுகளையே கூட போடலாம். ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ, ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ… எதுவேண்டுமானாலும் போடலாம். ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று, பதினாறு, இருபத்தியொன்று என ஒற்றைப் படையில் நாணயங்களை கலசத்துக்குள் வைக்கவேண்டும்.
முன்னதாக, கலசத்துக்குள்தான் மகாலக்ஷ்மியை ஆவாஹனம் செய்வோம். அந்தக் கலசத்துக்குள் நாணயங்களை வைப்பதால், நாணயங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்யத் தொடங்கிவிடுகிறாள். அந்த நாணயங்களை, பூஜைக்குப் பின்னர், வீட்டில் உள்ள பீரோவுக்குள் வைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தூபதீப ஆராதனை காட்டி பூஜித்து வந்தால், செல்வ கடாக்ஷம் தங்கும். பணமோ நகையோ எதுவாக இருந்தாலும் அவை நம் வீட்டில் மும்மடங்காகும் என்பது ஐதீகம்.
மேலும் ஏலக்காய், கிராம்பு முதலான வாசனை தரும் பொருட்களை கலசத்துக்குள் இடலாம். முக்கியமாக, ஒரு கைப்பிடி பச்சரியை கலசத்துக்குள் இட வேண்டும். கலசத்துக்குள் நாம் என்னென்ன பொருட்களை இடுகிறோமோ, அவையெல்லாம் நம் வீட்டில் எப்போதும் குறைவின்றி இருந்துகொண்டே இருக்கும். தடையின்றி பொருட்களை வாங்குவதற்கு, பணம் நம்மிடம் இருந்துகொண்டே இருக்கும்.
வரலக்ஷ்மி பூஜையன்று, நாணயங்கள், வாசனைப் பொருட்கள், தானியங்கள் முதலானவற்றை கலசத்தில் இட்டு பூஜை செய்யுங்கள். அன்னலட்சுமியாக, தன லட்சுமியாக, சந்தான லட்சுமியாக… என அஷ்ட லக்ஷ்மிகளுமாகவும் இருந்து அருளை வழங்குவாள் மகாலக்ஷ்மி.

error: Content is protected !!
Call Now